தமிழக கடற்கரையை நெருங்கி வந்த தித்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று இரவு வலுவிழந்தது.

வங்கக் கடலில் உருவாகி இருந்த தித்வா புயல் , தமிழகத்தை நோக்கி வரும் வழியில் இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி இருக்கிறது. 900க்கும் அதிகமானவர்களை பலி கொண்டு, பெரும் பொருட் சேதத்தை தித்வா புயல் மேற்கண்ட நாடுகளில் ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே தமிழக கடற்கரையை நெருங்கி வந்த தித்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று இரவு வலுவிழந்தது. சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கு திசையில் 90 கி.மீ தொலைவிலும் காரைக்காலுக்கு வடகிழக்கு திசையில் 180 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 90 கி.மீ தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது. தொடர்ந்து இது வடக்கு நோக்கி நகர்ந்து இன்று மதியத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கத்தால் மெரினா, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு, எண்ணூர், கோவளம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் சீற்றமாக இருந்தது. குறிப்பாக எண்ணூர், காசிமேடு பகுதிகளில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தது. அவ்வப்போது ராட்சத அலைகள் எழுந்தது. அதே வேளையில், கனமழை பெய்யாததால் கடற்கரையை நோக்கி மக்கள் வர தொடங்கினார்கள். இதனால் மெரீனா உள்ளிட்ட பீச் பகுதிகளுக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலெர்ட் :

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தித்வா புயலானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த போதிலும், சென்னை கடலோரப் பகுதியை ஒட்டி அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலை கொள்ளவிருப்பதாகவும் இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறுபட்ட தன்மைகளுடன் மழை பொழிவு இருக்கும் என தனியார் வானிலை ஆர்வலரான ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சென்னை கடற் பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலை நாள் முழுவதும் நீடிக்கப் போவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மழையின் அளவு தீவிரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் பகுதிகள் டெல்டா மாவட்டங்களிலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
 
அதே நேரத்தில் அதி கனமழைக்கோ அல்லது அதிதீவிர கனமழைக்கோ வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
 
 nandri tamil.timesnownews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *