மக்கள் போராட்டங்களால் நேபாளம் பற்றி எரியும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது. இந்த சூழலில் அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. தலைவிரித்தாடும் ஊழல், அரசியல் குழப்பங்கள், பொருளாதார நெருக்கடி ஆகியவை காரணமாக ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேபாள அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில் சமூக வலைதளங்களுக்கு புதிய கொள்கை வகுத்தது பெரிய பிரச்சினையாக மாற்றியிருக்கிறது. ஆட்சிக்கு எதிரான கருத்துகள், இணைய வழி மோசடிகள் எனப் பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க, அதற்கேற்ப புதிய கொள்கையை அந்நாட்டு அரசு வகுத்தது.
இதனை அமல்படுத்தியதும் டிக்டாக் தவிர மற்ற சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கும் நிலை ஏற்பட்டது. இது Gen Z இளைஞர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்த, போராட்டக் களம் அடுத்தகட்டத்தை நோக்கி மிகவும் சீரியசாக நகர ஆரம்பித்தது. போராட்டம், வன்முறை, தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு, துப்பாக்கிச்சூடு என விஷயம் சீரியசாக மாறியிருக்கிறது. இதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 300க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு முயற்சித்துள்ளனர்.
மேலும் பிரதமர், மத்திய அமைச்சர்களின் வீடுகளை சூறையாட திரண்டு வந்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அரசு தவித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது ராணுவ தலைமையகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். அடுத்தகட்டமாக வேறு நாட்டிற்கு தப்பித்து செல்வாரா? என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் நேபாளத்தில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகளை நடத்தி வருகின்றனர். மேலும் இந்தியா வம்சாவளி மக்களும் வசித்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் பலர் நேபாள குடிமக்களாக மாறிவிட்டனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய அரசு சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பேசுகையில், தற்போது நேபாளத்தில் உச்சகட்ட பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வன்முறையை சந்தித்து கொண்டிருக்கிறது.
அங்குள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நிலைமை மாறியுள்ளது. சிறிய குழுக்களாக ஆரம்பித்த இந்த போராட்டம், பல்வேறு தரப்பினர் சேர்ந்து மிகப்பெரியதாக மாறியது. இதில் இரண்டு விதமாக பார்க்கலாம். ஏற்கனவே கிளர்ச்சியாளர்கள் பலரும் இருக்கின்றனர். இதுதவிர அரசியல் ஆதாயம் தேடக்கூடிய நபர்களும் உள்ளனர். இதை ஆரம்பிப்பது எளிது. ஆனால் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமானது. வன்முறையை தடுக்க போலீசார் சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர்.
ஆனால் அதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட கோபம் மக்கள் போராட்டங்களை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தற்போதைய சூழலில் நிலைமை கட்டுக்குள் வருவதற்கு இன்னும் பல நாட்கள் ஆகும். எனக்கு கிடைத்த தகவலின் படி, அவர் தாய்லாந்து அல்லது பெய்ஜிங் செல்வதற்கு வாய்ப்பிருப்பதாக பேசிக் கொள்கின்றனர். வழக்கமாக புகலிடம் தேடுவதற்கு இந்தியாவை தான் தேர்வு செய்வர். ஆனால் இம்முறை வேறு நாட்டை தேர்வு செய்துள்ளனர். பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறினார்.
nandri tamil.samayam